Tuesday, December 21, 2010

மழையின் விளைவு?

கட்டுரையின் மூலம்: புதிய தலைமுறை வார இதழ் (23 திசம்பர் 2010)
 
                            இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும், கிராமங்களும், நகரங்களும் திண்டாட்டத்தில் இருக்க, ஒரே ஒரு உயிரினம் மட்டும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது, அவைகள் தான் கொசுக்கள்.   கொசுக்கள் என்பது நகர வாழ்க்கையின் அடையாளம் என்ற நிலை மாறி, இன்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. அவைகளின் பெருக்கத்தை தடுப்பது உண்மையில் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய சவாலாகத் தான் உள்ளது. எனினும் கொசுக்களைப் பற்றி நான் அறிந்தனவற்றை பகிர்ந்து கொள்கின்றேன்.

உற்பத்தி கேந்திரங்கள்:
                       பொதுவாகக்  கொசுக்கள் 41  பிரிவுகளாக  3500 வகைகள் உள்ளன. இவைகளின் உற்பத்தி கேந்திரங்கள் தேங்கிய நீர்நிலை, பிளாஸ்டிக் தொட்டிகள், தேங்காய் குடுவை, குளிர்சாதனப்பெட்டி, பூந்தொட்டி மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாத நீர். முட்டையிட்ட பிறகு நீர் வறண்டு  போகினும் 15 நாட்கள்  வரை தாக்குபிடித்து இனவிருத்தி செய்யும் தன்மையுடையன கொசுக்கள்.

அதிக பாதிப்பை உண்டாக்குபவைகள்:

                       3500 வகைகளை கொசுக்கள் இருந்த போதிலும் அதிக பாதிப்பை உண்டாகுவது ஏடிஸ்(aedes) மற்றும் அனோபிலிஸ் வகைகள் தான். மேற்கூறிய இரண்டு வகைகளும் மேற்கொண்டு இரண்டு பிரிவுகளாய் உள்ளன. இதில் ஏடிஸ் வகை கொசுக்கள் உப்பு நீரிலும் தடையில்லாமல் இனவிருத்தி செய்து மனிதன் மற்றும் மிருகங்கள் என்ற வேறுபாடின்றி நோய்களைப் பரப்பும் தன்மையுடையவை .   மற்றவை  அனோபிலிஸ் வகைகள், இவைகள்  நல்ல நீரில் தங்கள் இனங்களை விருத்தி செய்து, மனித இனத்தை மட்டும் தாக்கக்கூடியவைகள்.

எவ்வாறு தற்காத்துக்கொள்வது?       

  •     வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர்த்தொட்டி, பூந்தொட்டி இவைகளை முறையாக பராமரிக்கலாம். 
  •     நீர் சேமிப்புக்கலங்களை மூடி வைத்தல் நலம். மாதமிருமுறை சேமிப்புக்கலங்களை சுத்தம் செய்யலாம்.  
  •     குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி நீர் தேங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  •     சாளரங்களுக்கு(windows) கொசுவலைகளைப் பொருத்தலாம். 
  •     நீண்ட நாட்களாய் நீர் தேங்கி இருக்கும் என்ற எண்ணமிருந்தால், கொசு அழிப்பான்களை தெளித்து விடலாம்.
        இனி என்ன நிம்மதியாய் கொசுக்களின் தொல்லையின்றி உறங்கலாம். . . வாழ்க வளமுடன்..... 

    Friday, December 17, 2010

    சேவை மனப்பான்மை

    நன்றி கொல்லிமலைச்சாரல் ஆனந்த் (http://ceoblog.kapsystem.com)

    “ஏழை மக்களுக்குச் செய்கின்ற சேவை, கடவுளுக்கு நேராக சென்று சேர்ந்துவிடும். கடவுளைத் தரிசிக்க நாள்கணக்கில் வரிசையில் நின்று உண்டியலில் போடப்படுகிற பணம் மக்களாகிய கடவுளிடம் வராது”.
    ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பது சேவை பற்றி நம் முன்னோர்கள் கூறியது. ஆனால் இப்பொழுது இந்த வாசகம் அரசியல் தலைவர்கள் நகைச்சுயைாகப் பயன்படுத்துகிற வாசகம். கடவுள் சிலைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு தரவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
    ராமகிருஷ்ண பரமஹம்சர் யாத்திரைக்குப் போகும் வழியில் அநேக குழந்தைகள் உடைகள் இன்றி இருந்ததைப் பார்த்து யாத்திரையையே நிறுத்தினார். சீடர்களிடம் அவர்களுக்கு உடைகள் வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யக் கேட்டார். ‘நம்மிடம் இருக்கும் பணத்தில் உடைகள் வாங்கிவிட்டால், யாத்திரை போக முடியாது. பகவானைத் தரிசிக்க முடியாது’ என்று சீடர்கள் சொல்ல, ‘பகவானை இந்தக் குழந்தைகளிடமிருந்து இல்லாமல் கோயில்களிலா தரிசிக்க முடியும்?’ என்று கேட்டார். அந்த பக்குவம்தான் சேவை.
    காந்திக்கு ஏற்பட்ட சோதனை – பீதிகர்வா என்ற கிராமத்திற்கு சென்று இருந்தபோது, அங்கு இருந்த சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டார். அப்பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி மனைவியிடம் கூறினார். கஸ்துரிபா அவர்களும் சென்று அவர்களோடு பேசினார்கள். அதில் ஒரு பெண், தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள். “வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் ஒரு புடவைதான்; இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் சொல்லி எனக்கு இன்னொரு புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்”.
    நண்பர்களே, இது போன்ற நிலைமைகள் அறையாடை மனிதர் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தருவதற்கு முன்பு மட்டுமல்ல. இன்றும் நமது கிரமாப்புறங்களில் பல்வேறு குழந்தைகள் இந்த நிலைமையிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.
    நாம் மேலே பார்த்த காந்தியோ, இராமகிருஷ்ண பரமஹம்சரோ பணத்தை வைத்துக் கொண்டு சேவைக்குச் செல்லவில்லை. தன் மனத்தினால் சேவை செய்தார்கள். 
    “வாருங்கள் நண்பர்களே, நாம் ஒவ்வொருவரும், சுதந்திர இந்தியாவை கல்வியறிவுள்ள இந்தியாவாகவும் எழுச்சிபெற்ற இந்தியாவாகவும் மாற்றுவோம்.”
    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    தேசிய அவமானம்!

    நன்றி: தினமணி நாளிதழ்(17-12-2010)
                 அன்னிய ஏகாதிபத்திய ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி 63 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும்கூட, நாம் இன்னும் அடிமைத்தனச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, நமது ஆட்சியாளர்கள் இப்போதும் இந்தியாவின் பலத்தை உணரவில்லை என்பது  மட்டுமல்ல, இந்த மாபெரும் தேசத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை உணர்வுகூட இல்லாமல் இருக்கிறார்களே என்பது வேதனையளிக்கிறது. 
                    அது அமெரிக்காவானாலும் சரி, சீனாவானாலும் சரி, இந்தியாவை அவமானப்படுத்துவதில் துன்பியல் இன்பம் காண்பதை வாடிக்கையாக்கி விட்டிருக்கின்றன. சீனா நம்மை அவமானப்படுத்துவது புரிகிறது. ஆனால் அமெரிக்காவும் அப்படி இருக்கிறது என்கிறபோது, நமது வெளியுறவுக் கொள்கை தவறாக இருக்கிறதா இல்லை நமது ஆட்சியாளர்கள் முதுகெலும்போடு செயல்படாமல் இருக்கிறார்களா என்பது புரியவில்லை. அமெரிக்க அதிபர்களை நமது நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த வருந்தி அழைத்து வருவதால், இந்தியா தனது சுற்று தேவதை நாடுகளில் ஒன்று என அமெரிக்கா கருதிவிட்டதா என்கிற கேள்வியும் எழுகிறது. 
                    எந்தவொரு நாட்டிலும் சாதாரணப் பயணிகளைப்போல, அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் நடத்தப்படுவதில்லை. விமானநிலையங்களில் அவர்களுக்குத் தனியான வரிசை ஏற்படுத்தி பாதுகாப்புச் சோதனை செய்யப்படுவதுடன், அவர்கள் பணிபுரியும் நாடுகளில் என்ன பொருளை வாங்கினாலும் அதற்கு எந்தவிதமான வரியும் விதிப்பதில்லை என்பது சர்வதேச வழக்கு. 
                 ஷாரூக்கான், கமல்ஹாசன் என்று திரைப்பட நடிகர்கள் அமெரிக்காவில் சோதனையிடப்பட்டதை நாம் பெரிதுபடுத்தவில்லை. இவர்களுக்குத் தனி மரியாதை தரப்பட வேண்டும் என்று நாம் கோரவும் இல்லை. ஆனால் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமை பாதுகாப்புச் சோதனை என்கிற பெயரில் அவமானப்படுத்தினால் அது ஒவ்வோர் இந்தியக் குடிமகனையும் அவமானப்படுத்துவது போன்றதல்லவா? அதை எப்படி இந்திய அரசு சகித்தது? ஜிம்மி கார்ட்டரும், பில் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும்  இந்தியா வந்தால், அவர்களை அதேபோல சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா மௌனம் காக்குமா?போகட்டும், அது நடந்து முடிந்த கதை. அதிலிருந்து நாம் பாடம் படித்திருக்க வேண்டாமா? அமெரிக்காவிடம் கறாராகப் பேசி, இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டாமா? 
                   சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவருக்கு பாதுகாப்புச் சோதனையின்போது அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம்தான், நமது அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தூண்டுகிறது. ஹர்தீப்சிங் புரி என்பவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர். சீக்கியரான ஹர்தீப்சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். இது நடந்தது அமெரிக்காவிலுள்ள ஹெளஸ்டன் விமான நிலையத்தில். தான் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதி என்றும், தூதரக அந்தஸ்துப் பெற்றவர் என்றும் எடுத்துக்கூறியும் அந்தப் பாதுகாப்புச் சோதனையிடும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
                 இத்தனைக்கும் சுற்றுலாப் பயணிகளாகச் செல்லும் சீக்கியர்களைத் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்வதில்லை. இந்தியத் தூதரக அதிகாரி என்பதால் வேண்டுமென்றே அந்த அதிகாரிகள் ஹர்தீப்சிங் புரியைக் கேவலப்படுத்தினார்கள் என்பது தெளிவு.
                  கடந்த வாரம், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் இதேபோல, மிஸ்ஸிஸிப்பி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்தியத் தூதர் என்ற முறையில் அமெரிக்க அதிபரின் ஒப்புதலுடன் செயல்படும் உயர் அதிகாரி மீரா சங்கர். அவரது குற்றம் சேலை கட்டி இருந்தது. உங்கள் சேலையை அவிழ்த்துக் காட்டுங்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரை ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி கேட்பது என்றால், இந்தியாவை எந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். 
                சில மாதங்களுக்கு முன்னால் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குரேஷி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றார். வழியில் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறப்பதாக ஏற்பாடு. அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் பாதுகாப்புச் சோதனைக்கு அவர் உள்படுத்தப்பட வேண்டும். ஏதாவது அசம்பாவிதமோ, அவமரியாதையோ அவருக்கு ஏற்பட்டு விடலாகாது என்பதற்காக, அமெரிக்க வெளிவிவகாரத் துறை லண்டனில் இருக்கும் அமெரிக்கத் தூதரை அவருடன் கூடவே இருந்து விமானத்தில் ஏற்றி அமர்த்தும்படி உத்தரவிட்டது.   
                   நமக்குத் தெரிந்து இதுவரை எந்த வளைகுடா நாட்டு ஷேக்குகளின் மனைவியரையும் அவர்களது பர்தாவை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவோ, சோதனையிட நினைத்ததாகவோகூட நினைவில்லை. அப்படி ஏதாவது அதிகாரி முனைந்திருந்தால் அடுத்த நொடியே, பென்டகனும், வெள்ளை மாளிகையும், காப்பிடல் ஹில்சும் அலறித் துடித்திருக்கும். வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வராமல் போனால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பமே ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.     
                 எந்தவொரு நாடும் தனது பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். நமது இந்தியாவைப்போல, தலைவர் வீட்டு நாய்க்குட்டி என்பதற்காக அதற்கும் சலாம் போடும் பழக்கம் அமெரிக்கா போன்ற நாடுகளில் இல்லை என்பதும் உண்மை. அமெரிக்கா பாதுகாப்பு விஷயத்தில் நம்மைப்போல இல்லாமல் விழிப்புடன் இருப்பதை நாம் பாராட்டுவதுடன் பின்பற்றவும் வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.           
                      பாதுகாப்புச் சோதனைக்குத் தூதரக ஊழியர் உள்படுத்தப்படுவதில்கூடத் தவறில்லை. ஆனால், சேலையைக் கழற்றித்தான் இந்தியத் தூதரைச் சோதனையிடுவேன் என்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லவா? நாம் பிறந்த புண்ணிய பூமிக்கு இழைக்கப்படும் அவமானம் அல்லவா அது? 
                        நிமிர்ந்து நிற்கவும், எதிர்த்துக் குரலெழுப்பி அமெரிக்காவை எச்சரிக்கவும் நாம் ஏன் தயங்குகிறோம்? ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக நமது தேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன?

    Thursday, December 16, 2010

    ஒப்பீடு

    நன்றி: ஆனந்த் @ http://ceoblog.kapsystem.com/
                ஒருவர் இன்னொருவருடன் ஒப்பீடு செய்வது உயர்வைத் தராது. இதோ.. ஓஷோ சொல்வதைச் செவிமடுப்போம். துறவி ஒருவர் என்னுடன் உரையாடியபோது, ஒப்பீடு ஒரு வகையில் நல்லது என்றார். மகிழ்ச்சி இல்லாத மனிதர்களைக் கண்டுகொள்வதே மகிழ்ச்சியின் இரகசியம் ஆகும் என்று விளக்கினார். ‘முடமானவனைப் பார்த்து, நடப்பவன் மகிழலாம். விழியற்றவனைப் பார்த்து, பார்க்க முடிந்தவன் மகிழ்ச்சி கொள்ளலாம். ஏழையைப் பார்த்து, ஓரளவு வசதியுள்ளவன் மனநிறைவு அடையலாம்’ என்று சொல்லிக் கொண்டே போனவரை நான் தடுத்து நிறுத்தினேன். ‘ஓர் எளிய உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஒருவன் இன்னொருவனுடன் ஒப்பீடு செய்யத் தொடங்கிவிட்டால் அவனைவிட அதிர்ஷ்டக் குறைவானவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கமாட்டான். அவனைவிட அழகு, அறிவு ஆகியவை அதிகம் உள்ளவனுடனும் வலிமையுள்ளவனுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து துயரமடைவான். நீங்கள் அவனுக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தைச் சொல்லவில்லை. துயரத்தின் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறீர்கள்’ என்றேன். யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையை உருவாக்கும். நீ ஒரு முறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இல்லை!!!
                  ஓஷோவின் இந்த வார்த்தைகள், நம்முன் ஓயாமல் ஒலிக்கட்டும். மனத் திருப்திக்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற் கதவுகள் ஒருபோதும் திறக்காது. தொடுவானத்துக்கு அப்பால் மாயத் தோற்றமிடும் ரோஜாக்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு ஜன்னலுக்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூவின் ஸ்பரிசத்தில் பரவசம் கொள்வதே வாழ்வின் புத்திசாலித்தனம்.

    அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது. 
    உன்னிடம் இருப்பதோடு திருப்தி அடைவாயாக. ஒருவன் எல்லாவற்றிலும் முதல்வனாக முடியாது.

    Thursday, November 25, 2010

    நில மோசடி----அரசியல்வாதிகள்

                         கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற சொற்றொடர் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்போது நன்றாகவே பொருந்தும். மும்பையில் ஆதர்ஷ் வீடுகள் தொடர்பாக முழுவீச்சில் களத்தில் இறங்கி, அந்த மாநில முதல்வர் பதவி விலக வேண்டிய சூழலை உருவாக்கிய பா.ஜ.க.வினருக்கு, தற்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவும் இதே சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது, மிகவும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.மும்பையில் எத்தகைய முறைகேடு நடைபெற்றதோ அதற்கு இணையான, அதைவிடவும் மிகவும் மோசமான முறைகேடுகள் கர்நாடகத்திலும் நடைபெற்று இருக்கின்றன.                                                                       

                          முதல்வர் பதவியில் இருப்பவர் தனது அதிகாரத்தைத் தன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது. அதை மீறுவது பதவிப் பிரமாணத்தை மீறிய குற்றம். ஆனாலும் அதிகாரம் கண்களை மறைக்கிறது. குடும்பத்தை மட்டுமே முன்நிறுத்துகிறது. இதற்கு எந்த மாநிலமும், எந்த முதல்வரும், ஏன், அரசியலில் இருக்கும் பெரும்பான்மையான தலைவர்கள் பலரும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.

                          எடியூரப்பா, அவரது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையத்தின் "ஜி' பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் தன் மகன், மகள் உறவினர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த முறைகேட்டில் தான் தப்பிக்க முடியாது என்கிற நிலையில், தன் மகள், மகன் மற்றும் உறவினர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்கள் திருப்பித் தந்துவிடுவார்கள் என்று கூறித் தப்பிக்க முயற்சிக்கிறார் எடியூரப்பா.

                       திருடியதைக் கொடுத்து விடுகிறேன் என்றால், திருடன் அல்ல என்றாகிவிடுமா, என்ன? இப்போது இன்னும் வேகமாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன. இவர் மீது மட்டுமல்ல, எடியூரப்பாவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக உள்ள ஷோபா கரந்தலஜே மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்தன. வீட்டுவசதித் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, அவரது மகன் (மாநகராட்சிக் கவுன்சிலர்) கட்டா ஜகதீஷ் மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய முறைகேடு, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராமகிருஷ்ண ஹெக்டேயில் தொடங்கி குமாரசாமி வரை இருக்கிறது. எடியூரப்பாவின் நிலமோசடி ஊழல் மறுக்க முடியாத அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் தற்போது பா.ஜ.க.வுக்கு இருக்கும் நெருக்கடி. நியாயமாகப் பார்த்தால், எடியூரப்பா தார்மிக அடிப்படையில் தனது பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார் எடியூரப்பா. 

                        தனது கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படியொரு ஊழலை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஸ்தம்பிக்கச் செய்யும் பா.ஜ.க.வின் போக்கு தற்போது அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. முதலில் கர்நாடகத்தில் உள்ள ஊழலுக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்தவர் ஊழலைப் பற்றிப் பேசுங்கள் என்று காங்கிரஸ் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி யாரெல்லாம் ஊழல் புகாரில் சிக்கினார்களோ அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, பதவியிலிருந்து நீக்கிக் கொண்டே வருகிறது என்கிற தார்மிக பலம்தான் காரணம். சசி தரூர், மும்பையில் முந்தைய முதல்வர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கல்மாடி மற்றும் அவரது நண்பர்கள் என்று அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வால் இதுவரை எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை. தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியை உடைப்பேன் என்று அவர் சொல்வதாக மேலிடத்துக்குத் தகவல் பறக்கிறது. தென்னகத்தில் தனது சக்தி கேந்திரம் என்று பா.ஜ.க. கருதும் கர்நாடக அரசை இழக்க அந்தக் கட்சி தயாராக இல்லை. அவரது சவாலைச் சகித்துக்கொண்டு சமாதானம் பேச தில்லிக்கு வரச் சொன்னால் புட்டபர்த்திக்குப் போகிறார் எடியூரப்பா. பா.ஜ.க.வால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. ஏற்கெனவே இரண்டு முறை எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தது. அதை ஒருவழியாகச் சமாளித்து வெளியே வந்த நிலையில் மூன்றாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளார் அவர். ஆட்சியைவிடக் கட்சியின் கௌரவம்தான் முக்கியம் என்று பாஜக கருதுவதாகத் தெரியவில்லை. தனது பதவியைவிட கட்சியின் நன்மதிப்புதான் பெரியதென்று எடியூரப்பாவும் கருதுவதாகத் தெரியவில்லை. 

                         எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நில மோசடி என்பது இந்தியா முழுவதிலும் அரசியல்வாதிகளின் தொழிலாகவே ஆகிவிட்டது. அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆட்சிக்கு நெருக்கமான தோழமைக் கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பினாமிகள், உறவினர்கள், ஏன், அரசுக்குச் சாதகமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு சிறப்பு ஒதுக்கீடு என்கிற பெயரில் வீட்டுமனைகள் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.              

                            ஓர் அரசு தனிநபருக்கு நிலத்தை வழங்குகிறது என்றால், அது குறித்து அரசு கெசட்டில் வெளியாக வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் வெளியானாலும்கூட, பலன்பெறும் நபர்கள் யார் என்கிற விவரம் தொடர்புடைய சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதால், அரசு கெசட்டில் வெளியானாலும்கூட யாருக்கும் தெரியாமலேயே போகிறது. யாரோ ஒரு நபருக்கு 30 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பதாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற பெயரிலும் அரசு நிலம் மிகக் குறைந்த விலைக்குக் கைமாறுகிறது. 

                        இதைச் செய்யும் அரசியல்வாதிகள் கோடிகோடியாய் லாபம் அடைகிறார்கள். இதில் அரசியல்வாதிகளை மிஞ்சும் மாவட்ட ஆட்சியர்களும்கூட இருக்கிறார்கள். முக்கியமான கோடைவாசஸ்தலங்கள் உள்ள பகுதிகளில் எந்தெந்த மாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலத்தில் யாருக்கெல்லாம் சலுகை விலையில் மனைகள், புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை எடுத்து, விசாரித்தால் இன்னும் பல பூதங்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளம்பும்.லியோ டால்ஸ்டாய் எழுதிய "6 அடி நிலம்' சிறுகதையை இவர்களுக்கு யார் படித்துக் காட்டுவது?

    வரலாறு காணாத ஊழல்!

                           1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

                           இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?
                          
                         இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.    

                             தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை. 

                          பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். 
                         
                         அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

    பிகார் தெரிவிக்கும் செய்தி!

                            பிகார் சட்டப்பேரவை முடிவுகள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணிக்கும், ராகுல் காந்தியின் செல்வாக்கை நம்பித் தனித்துக் களமிறங்கிய காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், அரசியல் நோக்கர்கள் பார்வையில் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. காங்கிரஸம் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணியில் இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இந்த அளவுக்குப் படுதோல்வியைச் சந்தித்திருக்காதே தவிர, நிதீஷ் குமாரின் தலைமையிலான ஆளும் கூட்டணியின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது என்பதுதான் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் பாடம்.
                              முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி, பிகாரிலுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கில் மூன்று பங்கு இடங்களை வென்று வரலாறு காணாத வெற்றியை அடைந்திருக்கிறது. 2005 சட்டப்பேரவைத் தேர்தலில் 36% வாக்குகளையும், 2009 மக்களவைத் தேர்தலில் 38% வாக்குகளையும் பெற்ற இந்த அணி, இப்போது மேலும் 2% வாக்குகள் அதிகமாகப் பெற்றிருப்பது ஆளும் கூட்டணியின்மீது மக்களுக்கு அதிகரித்துவரும் நம்பிக்கையின் அடையாளம் என்றுதான் கூற வேண்டும்.2005 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் 63% இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் 82% இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 54% இடங்களை மட்டுமே வெற்றிபெற்றதுபோக, இப்போது 2010 சட்டப்பேரவைத் தேர்தலில் 89% இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது, 10 இடங்களில் போட்டியிட்டால், அதில் 9 இடங்களை வென்றிருக்கிறது.

                       இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி பல சோதனைகளையும், எதிர்ப்புகளையும் நேரிட வேண்டிய சூழ்நிலை. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல்கள் ஒருபுறம். அயோத்திப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிறுபான்மையினரை ஆளும் கூட்டணிக்கு எதிராக ஒருங்கிணைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம். செல்லும் இடமெல்லாம் ராகுல் காந்திக்குக் கிடைத்த வரவேற்பும், கூட்டமும், காங்கிரஸôர் மத்தியில் எழுந்த எழுச்சியும் ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்கு வங்கியைத்தான் கணிசமாகப் பாதிக்கும் என்று எழுந்த எதிர்பார்ப்பு இன்னொருபுறம். ஆனால், இவை அனைத்துமே மக்கள் மன்றத்தின் தீர்ப்பை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பதுதான், 2010 பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கும் வியப்புக்குரிய விஷயம்.மதவாதமும் சரி, ஜாதியவாதமும் சரி ஓரிரு தேர்தல்களில் வேண்டுமானால் மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதால் வெற்றிக்கு உதவக்கூடும். ஆனால், நல்லாட்சி தரப்படாவிட்டால், சநாதனியானாலும் சரி, சாமானியன் ஆனாலும் சரி மக்கள் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த வெகுஜன விரோத ஆட்சியைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.

                      பிகாரைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்பது யாதவர்களை மட்டுமே உள்ளடக்கியதல்ல. குர்மி, கோரி போன்ற பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களையும் உள்ளடக்கியது. பிற்படுத்தப்பட்டவர் என்பதால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட லாலுபிரசாத் யாதவ், ஏனைய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தனது ஆட்சியை யாதவர்களின் ஆட்சியாகவும், தனது குடும்பத்தின் ஆட்சியாகவும் நிலைநிறுத்த முயன்றதுதான் அவரது வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. குர்மி ஜாதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இனத்தவரான நிதீஷ் குமார், லாலுபிரசாத் யாதவைப்போல ஜாதியச் சட்டையை அணியாமல், பிகாரின் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை முன்வைத்தபோது, மக்களும் அந்தத் தலைவரின் குரலுக்குச் செவிசாய்த்து, அவரது கரங்களை வலுப்படுத்த முன்வந்தனர்.

                           பாரதிய ஜனதா கட்சியின் பிராமணர், சத்திரியர், வைசியர், பூமிகார் போன்ற உயர்ஜாதி வாக்கு வங்கியுடன், நிதீஷ் குமாரின் யாதவரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும், தங்களை ஆதிக்கம் செலுத்தும் ஜாதியான யாதவர்களின் தலைவர் லாலுபிரசாத்துடன் ராம்விலாஸ் பாஸ்வான் கைகோத்தது பிடிக்காத தாழ்த்தப்பட்ட "பாசி' இன வாக்குகளும், வகுப்புக் கலவரங்கள் இல்லாத, வளர்ச்சியை முன்வைக்கும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக ஆட்சியை ஆதரிக்க முன்வந்த சிறுபான்மையினரின் வாக்குகளும் சேர்ந்தபோது, நிதீஷ் குமாரின் தலைமையிலான ஆளும் கூட்டணி நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றியதில் வியப்பொன்றும் இல்லை.உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களைப் போலவே, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ராகுல் காந்தியின் செல்வாக்கு, வாக்குகளைப் பெற்றுத்தரும் செல்வாக்கு அல்ல என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நல்ல தலைமை இல்லாமல் தத்தளிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் போன்ற யாராவது தலைமை ஏற்பார்களேயானால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாற்றாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பை, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருக்கின்றன என்றுகூடக் கருத வாய்ப்பிருக்கிறது.
                       லாலுபிரசாத் யாதவின் குடும்பத்தினர் ஒருவர்கூட இல்லாமல், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிகாரில் ஒரு சட்டப்பேரவை அமைய இருக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸýம்படுதோல்வியடைந்ததற்கு, அந்தக் கட்சிகளின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையும் ஒரு மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. காஷ்மீரிலும் சரி, இப்போது பிகாரிலும் சரி, அச்சுறுத்தல்களைப் பொருள்படுத்தாமல் மக்கள் நல்லாட்சியை எதிர்பார்த்து வாக்களிக்க முன்வந்தனர். காஷ்மீரில் ஏமாற்றப்பட்டனர். தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். பிகாரில் எதிர்பார்ப்புப் பொய்க்கவில்லை. மகத்தான வெற்றியை மீண்டும் அளித்திருக்கிறார்கள்.

                           மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வளர்ச்சியை விரும்புகிறார்கள். நல்லாட்சியை விரும்புகிறார்கள். ஊழலையும் குடும்ப ஆட்சியையும் வெறுக்கிறார்கள். இதுதான் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தியாவுக்குத் தெரிவிக்கும் செய்தி!

    Saturday, October 23, 2010

    வீராப்பான மனிதர். . நசன்

                   1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், அவரே அவர் வீட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருக்கிறார் என்று கேட்டால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா?

                 மூன்று அடிக்கு மூன்று அடி குழி ஆரம்பத்தில் ரெடி. கேட்டவர்களிடம் தென்னம்பிள்ளைக்கான குழி என்றார். குழியின் அளவு பெரியதாகி பள்ளமாய் தோன்றியது. இப்போது கேட்டவர்களிடம் கழிப்பறைக்கான குழி என்றார். இன்னும் பள்ளம் பெரியதாகி, ஓரளவுக்கு கிணறு போன்ற தோற்றம் கிடைக்க அவரால் உண்மையை மறைக்க இயலவில்லை. "நானே சொந்தமாய் கிணறு வெட்டுகிறேன்" என்று சொன்னபோது, அக்கம் பக்கம் சிரித்தது. வேலையற்ற வேலை என்று தலையில் அடித்துக் கொண்டது.

                அவரோ விடாமல் தோண்டி, தோண்டி ஒருநாள் இலக்கை அடைந்தார். ஊரெல்லாம் வற்றிக் கிடக்க, அவர் தோண்டிய கிணற்றில் மட்டும் நீர் சுரந்துக் கொண்டே இருந்தது. கேலி பேசியவர்கள் குடத்தை எடுத்துக் கொண்டுவந்து நீர் பிடித்துச் சென்றார்கள்.

               பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இவரை வீம்புக்கார மனுஷன் என்கிறார்கள். வீம்புக்கு வேறு சில பெயர்களும் தமிழில் உண்டு. தன்னம்பிக்கை. விடாமுயற்சி. சுறுசுறுப்பு.

                 அந்த மனிதர் பொள்ளாச்சி நசன். தமிழ்க்கனல் என்ற பெயரில் இலக்கிய வட்டாரங்களில் பிரபலம். "எந்த வேலையையும் என்னால் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே நான் கிணறு தோண்டினேன். அது நிச்சயமாக வெட்டி வீம்பு அல்ல. செய்யும் வேலையை நெஞ்சில் நிறுத்தி, தொடர்ச்சியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், சோர்ந்துவிடாது இலக்கை அடையும் வரை இயங்கிக்கொண்டே இருந்தால் வெற்றி என்பதைத் தவிர வேறென்ன கிடைக்கும்?" என்கிறார் நசன். இப்போது 58 வயதாகிறது. 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆசிரியப்பணியை செம்மையாக செய்து, கடந்தாண்டு அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றிருக்கிறார். தமிழார்வலரான இவருடைய தமிழ்ப்பணிகள் தொடர்கிறது.

                 இவருடைய உண்மையான பெயர் நடேசன். பெயரில் "டே" இருப்பது அவருக்கு மரியாதைக் குறைவாக பட்டதால், அதை நீக்கிவிட்டும் 'வெறும்' நசன் ஆகிவிட்டார். "பின்னே நாமளே நம்மை 'டேய்' போட்டு கூப்பிடறதை அனுமதிக்கமுடியுமா?" என்கிறார் வீம்புடன். மன்னிக்கவும், தன்னம்பிக்கையுடன். நசன் என்ற இந்தப் பெயர் சுயமரியாதை கொண்டது மட்டுமல்ல. தனித்துவமும் பிரபலமும் கூட கொண்டிருக்கிறது. 'நசன், பின்கோடு - 642 006' என்று அஞ்சலட்டையில் முகவரி எழுதி அனுப்பினாலே அவருக்கு சென்று சேர்ந்து விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?

                கிணறு வெட்டுவது, பெயரில் 'டே'யை நீக்கியது என்றில்லாமல், இன்னும் ஏராளமான 'இண்டரெஸ்டிங்' விஷயங்கள் பொள்ளாச்சி நசனிடம் உண்டு.

                 1985ல் விடுதலைப்பறவை என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகையை நடத்தினார். கவிதை, துணுக்கு, குறிப்பு என்று பல்சுவையான விஷயங்களை அவரே எழுதுவார். உருட்டச்சு இயந்திரம் ஒன்றினை (கிட்டத்தட்ட ஜெராக்ஸ் மாதிரி – ஆனால் ஜெராக்ஸ் அல்ல) அவரே உருவாக்கி, அதில் 100 பிரதிகள் அச்சடித்து கிடைத்த முகவரிக்கெல்லாம் தபாலில் அனுப்பி வைப்பார். இதுமாதிரி மொத்தம் 34 இதழ்கள் மாதந்தோறும் உருட்டி, உருட்டி ஊருக்கெல்லாம் அனுப்பி வைத்திருக்கிறார். விடுதலைப் பறவையில் தனக்கு வாசிக்க கிடைத்த சிற்றிதழ்களை எல்லாம் பட்டியலிட்டு அறிமுகப்படுத்துவார்.

                 இதைக்கண்ட நண்பர்கள் சிலர், அவரவருக்கு தெரிந்த சிற்றிதழ்களை இவருக்கு அறிமுகப்படுத்த, சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தவென்றே ஒரு பத்திரிகை தொடங்கினாலென்ன என்றொரு 'ஐடியா' இவருக்கு தோன்றியது. ஆரம்பித்து விட்டது அடுத்த திட்டம். இம்முறை உருட்டச்சுப் பத்திரிகையாக இல்லாமல், நேரடியாக அச்சுப் பத்திரிகையாக மலர்ந்தது 'சிற்றிதழ் செய்தி'. முதல் இரண்டு இதழ்கள் அச்சகம் ஒன்றில் அச்சடிக்கப்பட்டது.

                மூன்றாவது இதழிலிருந்து இவரே ஒரு அச்சகம் தொடங்கி அச்சிட ஆரம்பித்தார். வழக்கம்போல முதலாளியும் இவரே. தொழிலாளியும் இவரே. அச்சகம் என்றால் பெரிய பிரிண்டிங் பிரஸ் என்று நினைத்து விடாதீர்கள். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது மாதிரி, கையால் சுற்றும் 'டிரெடில்' மிஷின் ஒன்று. 20 கிலோ அலுமினிய அச்சு எழுத்துகள். 5 கிலோ தலைப்பு எழுத்துகள். அச்சுக்கோர்க்க பழகி இவரே ஒவ்வொரு எழுத்தாக எடுத்து கோர்த்து, பிழை திருத்தி, இயந்திரத்தில் ஏற்றி ஃபார்ம் தயாரிப்பார்.

                    மிஷினை கையால் சுற்றிவிட யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு, தாளை வைத்து அச்சாக்கி எடுப்பார். சிற்றிதழ் செய்தி என்பது சிற்றிதழ்களின் தொடர்புக்காகவும், இணைப்பிற்காகவும் வெளிவந்த இதழ். ஆரம்பத்தில் இருமாத இதழாக வந்தது. பின்னர் இலக்கிய அபிமானிகளிடம் பெரியளவிலான வரவேற்பினைத் இதுபெற்ற போதிலும் நசனால் தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஏனெனில் ஒவ்வொரு இதழைத் தயாரிக்கவும் அச்சுக்கோர்த்து, பிழைத்திருத்தி, எழுத்துகளைப் பிரித்துப் போட்டு வேலை பார்த்ததால் அவரது கண்பார்வை மங்கத் தொடங்கியது. கண்ணாடி நிரந்தரம் ஆனது.

                    மொத்தம் 34 இதழ்கள் சிற்றிதழ்ச் செய்தி வந்திருக்கிறது. அவற்றில் கடைசி சில இதழ்கள் கணினியில் அச்சுக்கோர்க்கப்பட்டு, ஆஃப்செட் முறையில் அச்சானவை. அந்த வேலையையும் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கி நசனே வடிவமைத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                  இடைப்பட்ட காலத்தில் நிறைய சிற்றிதழ்கள் இவருடைய சேகரிப்பில் சேர்ந்ததால் அவற்றை தமிழகம் முழுக்க ஆங்காங்கே கண்காட்சிகளாக வைத்து இலக்கிய ஆர்வலர்களை கவர்ந்தார். மொத்தம் 15 இடங்களில் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தில் கண்காட்சி வைத்தபோது, சில தமிழ்சார்ந்த அறிவுஜீவிகள் 'விலங்கியல் படித்தவருக்கு தமிழில் என்ன வேலை?' என்று விசனப்பட, நம்மாளுக்கு மீண்டும் 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்தது. உடனே தமிழ்முதுகலை படித்து, இரண்டே ஆண்டுகளில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

                  1999 வரை சிற்றிதழ்ச் செய்தி இதழ் வெளிவந்தது. இக்காலக் கட்டம் வரை சுமார் 2700 வகையான சிற்றிதழ்கள் நசனின் சேகரிப்புக்கு கிடைத்தது. 1985க்குப் பிறகுவந்த கிட்டத்தட்டஎல்லா தமிழ்ச் சிற்றிதழ்களும் இன்று பொள்ளாச்சி நசனிடம் இருக்கிறது.

                  தமிழ்த்தேசிய சிந்தனையாளரான தோழர் தியாகு சென்னையில் ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களோடு பழகக்கூடிய வாய்ப்பு நசனுக்கு கிடைத்தது. தாய்மொழிக் கல்வியில் அடிப்படைக் கல்வியை கற்பது ஒரு மாணவனின் அறிவுக் கண்ணுக்கு திறவுகோலாக இருக்குமென்று உணர்ந்தார். திருப்பூர், பல்லடம், கோபியென எங்கெல்லாம் தாய்த்தமிழ்ப் பள்ளி இயங்குகிறதோ அங்கெல்லாம் சென்று எப்படி நடத்தப்படுகிறது என்று ஆராய்ந்தார். வழக்கம்போல இவரே ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளியை சூளேசுவரன் பட்டியில் தொடங்கி இன்றும் நடத்தி வருகிறார். சுமார் 140 குழந்தைகள் படிக்கிறார்கள்.

                 சோதனைமுறையில் இப்பள்ளியில் புதுமையான கற்பித்தல் முறை ஒன்றினை நடத்தி பெரும் வெற்றியும் கண்டார். வெறும் 32 அட்டைகளில் சில பாடங்களை உருவாக்கினார். இவற்றை மட்டுமே படிக்கும் மாணவர்கள், வெறும் மூன்றே மாதங்களில் தமிழ்ச் செய்தித்தாளை படிக்குமளவுக்கு தமிழில் தேறிவிடுகிறார்கள். இந்த கற்பித்தல் முறை கோவை மாவட்டம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு நல்ல வெற்றியும் கண்டது. தமிழே அறியாத ஒருவரும் மூன்று மாதங்களில் தமிழைப் படிக்கக்கூடிய அளவுக்கு இந்த பாடங்களை எளிமையாக, நுணுக்கமாக அமைத்திருக்கிறார் நசன்.

                   தன்னுடைய பல்லாண்டுகால சிற்றிதழ் சேகரிப்புகளையும், எளியவழித் தமிழ்க் கற்பித்தலையும் சொந்தமாக தமிழம்.நெட் (thamizham.net) என்ற இணையத் தளத்தை தொடங்கி அதில் மொத்தமாக பதிவேற்றி இருக்கிறார். இந்த இணையத்தளத்தில் ஆங்கிலவழி தமிழ் கற்பித்தலுக்கான இணைப்பு இருக்கிறது. 35 பாடங்களில் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். இவை தொடக்க நிலைப் பாடங்கள். மேற்கொண்டு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கும் சி.டி. வடிவிலான பாடங்கள், படவடிவக் கோப்புகள், அட்டைகள் என்று நிறைய உருவாக்கி வைத்திருக்கிறார். இணையம், சி.டி. போன்றவற்றை அவை தொடர்பான எச்.டி.எம்.எல் போன்ற கணினி தொழில்நுட்பங்களை கற்று, வழக்கம்போல நசனே உருவாக்கியிருக்கிறார் என்பதை நாம் குறிப்பிடாமலேயே நீங்கள் இன்னேரம் யூகித்து விட்டிருப்பீர்கள்.

                 "என்னுடைய இளமைக்காலம் உணவுக்காக ஏங்கிய காலம். பெருங்காய மூட்டை சுமந்து என்னுடைய அப்பா எங்களை காப்பாற்றினார். 74ல் பட்டம் முடித்த எனக்கு 80ல்தான் வேலை கிடைத்தது. 25 ஆண்டுகள் முழுமையான ஆசிரிய வாழ்வை வாழ்ந்திருக்கிறேன். நல்ல மாணவர்களை கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுக்கும் நிறைவு வேறு எந்தப் பணியிலுமே கிடைக்காது. நம் மாணவர்கள் நம்மை விடவும் சிறப்பாகவும், திறமையாகவும் இயங்குவது கொடுக்கும் நெகிழ்வுத்தன்மை வேறெங்கு கிடைக்கும். பணியிலிருந்து கிடைத்திருப்பது வயதுரீதியிலான ஓய்வு. என்னுடைய தமிழுக்கு ஏது ஓய்வு? அது தொடந்துகொண்டேயிருக்கும்" என்று நெகிழ்ச்சியாக முடிக்கிறார் நசன்.

                     என்றாவது, எங்காவது வீராப்பான ஒரு தமிழரை நீங்கள் காணக்கூடும். உற்றுப் பாருங்கள். ஒருவேளை அவர் பொள்ளாச்சி நசனாகவும் இருக்கக்கூடும்.
    நன்றி : புதிய தலைமுறை வார இதழ். . ..

    Friday, September 3, 2010

    மறுபக்கம்...

                    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் உச்சகட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம். 
              கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி. 

                  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது  தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.  

                    2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது   உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

                      தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்சிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம். 

                    "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.  தருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு. 

                  தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்?உணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா? சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள். 

                     எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா? எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா? வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா?

                        விடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன? நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்?

                       தனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித்  தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும்  கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்?

                      பொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...

    "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்"

                   
                    பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது. 
     
             இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது. 
     
                    இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும்,  தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.
     
                      ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது. இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது. 
                   
                   கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை. இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.
     
                 முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே  பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள். 
     
                 இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது. நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!

    நன்றி:
    தினமணி நாளிதழ். .

    Saturday, August 21, 2010

    தமிழா, நீ பேசுவது தமிழா?


                 ஹாய் வியூவர்ஸ், இன்னைக்கு நம்ப ஷோவுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாருன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸô இருக்கும். ப்ளீஸ், இப்ப ரெடியா இருங்க அவங்கள வெல்கம் பண்ண. அதுக்கு முன்னாடி சின்ன கிளாப் பண்ணுங்க'.
               "நீங்க ரொம்ப லைக் பண்ற "சாங்'க கேட்கிறதுக்கு முன்னாடி, இப்ப சிட்டியோட டிராபிக் கண்டிஷனைப் பார்ப்போம்.
               ஒகே. டா. ஈவ்னிங் மீட் பண்ணலாம். கண்டிப்பா பிலிம் போறோம். ஒகே.வா. பை!.
           மேற்குறிப்பிட்ட உரையாடல்கள் தமிழகத்தில் செம்மொழியின் பெருமைக்குரியவர்களான நாம் பேசும் அன்றாடப் பேச்சுகளே. தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், நண்பர்களுடனான உரையாடல்களில் புழங்கும் தமிழுக்கு உதாரணங்கள்.
              "உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.
               நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. இன்றுள்ள தமிழ் வேறு. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதி வரை தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத் தமிழே பேச்சுவழக்காகவும், இலக்கிய வழக்காகவும் இருந்தது. மொழிக்கலப்பை எதிர்த்து ஓர் இயக்கமே உருவான பெருமையும் சிறுமையும் தமிழுக்கே உரியது.
               தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழின்மேல் இருந்த தீராக் காதலால் கட்டியமைத்தார்கள். தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்தைப் பிரித்தெடுத்தது. இன்று சம்ஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் வந்து உட்கார்ந்துவிட்டது. ஸ்ரீதரன் எல்லாம் திருக்குமரன் ஆனார்கள். மீண்டும் இப்பொழுது விக்கியும், மிக்கியுமாக நம் பிள்ளைகள்.
             உலகம் முழுவதும் வாழும் இனத்தினர் தங்களுக்குள் தாய்மொழியில்தான் பேசிக்கொள்கிறார்கள். படித்த தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். தாய்மொழியில் பேசிக்கொள்வதும், மொழியைக் கலப்பின்றிப் பேசுவதும் ஏன் நாகரிகக் குறைவான செயலாக, படிக்காதவர்களின் பழக்கமாகப் பார்க்கப்படுகிறது?
            உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தொடக்கவிழாவில் பேசிய தமிழறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி ஒரு கருத்தை வலியுறுத்தினார். ""உலகில் உள்ள 6,000 மொழிகளில் 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழித் தகுதி உள்ளது. 6 மொழிகளிலும் தமிழ் மட்டுமே இன்றும் மக்கள் பேசும் மொழியாக உள்ளது'' என்று.
         கடந்த இருபதாண்டுகளில் தமிழின் பேச்சுவழக்கு படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. பேச்சின் வழியாகவே ஒவ்வொரு குழந்தையும் மொழியை உள்வாங்கிக் கொள்கிறது. பேச்சின் மூலமே ஒரு மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும். இன்றைக்குப் பிறந்து வளரும் ஒரு குழந்தை நம் மொழியை எப்படி உள்வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துப் பார்த்தால் ஆழ்பள்ளத்தில் விழுகிறார்போல் கிடுகிடுவென நடுங்குகிறது நெஞ்சம்.
              நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் உள்ள குடும்பங்களில் அம்மா-அப்பாவின் பேச்சுகளைக் கேட்கும் நேரத்தைவிட, ஒரு குழந்தை, தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் குரலைக் கேட்கிறது. ஒளி - ஒலி ஊடகத் தொகுப்பாளர்களுக்கு நல்ல தமிழ் தெரியக்கூடாது என்பதுதான் முதல் தகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தமிழை அவ்வளவு வேகமாக உச்சரிக்கவே முடியாது. ஆங்கிலத்தை உச்சரிக்கும் லாவகத்துடன், தமிழை விழுங்கி உச்சரித்து தமிழே நாவின் அடியில் அமுங்கிப் போகிறது.
               ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களை இன்னும் தங்கள் பிடியில் வைத்திருப்பவை செய்தித்தாள்கள். வெகுஜன ஊடகங்களில் அன்றாடச் செய்திகளுக்காக மக்கள் இன்னும் தினசரிகளையே சார்ந்திருக்கிறார்கள். கிராமத்து அரசமரத்து தேநீர்க் கடை தொடங்கி, அலுவலகங்கள்வரை செய்தித்தாளின் இருப்பு மிக முக்கியமானது. ஆங்கிலக் கலப்பில்லாத தலைப்புகளையும், செய்திகளையும் ஒருகை விரலுக்குள் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையிலான பத்திரிகைகள் மட்டுமே வெளியிட்டு வருகின்றன.
               அநேகப் பத்திரிகைகளின் தலைப்புகளைப் பார்த்தால் நாம் படிப்பது தமிழ் நாளிதழ்தானா என்ற குழப்பமே மிஞ்சும். "மந்திரிசபை டிஸ்மிஸ், மாஜி அமைச்சருக்கு கல்தா, கைதிக்கு வாரண்ட்' இந்தத் தலைப்புகள் சொல்லும் உண்மை என்ன? நாம் தமிழில் சிந்திப்பது குறைந்து ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கி விட்டோம் என்பதா?
             தொலைக்காட்சிகளில் எத்தனை தொலைக்காட்சிகளுக்குத் தமிழில் பெயர் உள்ளன? பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க ஒரு காலவரையறை வைத்ததைப்போல்,திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க ஊக்கத்தொகை வழங்கியதைப்போல் தொலைக்காட்சிகளுக்கும் பெயர் மாற்றம் செய்யலாமே? நிகழ்ச்சிகள் பெரும்பான்மைக்கு ஆங்கிலப் பெயர்கள்.
              படித்த, நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் தமிழில் உரையாடுவது அருகி வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களின் பல தனியார் அலுவலகங்களுக்குச் சென்றால் அத்தனையும் ஆங்கிலம்.
             அமெரிக்கத் தூதரகத்துக்கோ, பிரிட்டிஷ் தூதரகத்துக்கோ வந்துவிட்ட திகைப்பு. தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? "தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ?
            பரவலாகிவிட்ட ஆங்கிலவழிக் கல்விதான் மொழிக் கலப்புக்கான அடிப்படையா என்று யோசித்தால், தமிழகத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்களே ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். மீதமுள்ள 80 சதவீத மாணவர்கள் தமிழ் வழியில்தான் பயில்கிறார்கள்.
            தமிழகத்தில் உள்ள ஆங்கிலக் கல்வியின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கிடையாது. "வாட்' மா? "டெல்' மா, "ரீட்' பண்ணு, "ரைட்' பண்ணு போன்ற அரைகுறை வாக்கியங்கள்தான்.
          தமிழிலும் புலமை பெறாமல், ஆங்கிலத்திலும் புலமை பெறாமல் இரண்டுங்கெட்டானாகி விடுகிறார்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள். மாநகரங்களில் உள்ள சில பள்ளிகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.
            எந்த மொழியின் கலப்பின்றியும் நம்மால் பேச முடியாதா? எழுத முடியாதா? நிச்சயம் முடியாது. இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கும்பொழுதே மொழியின் கலப்பு உருவாகியிருக்கக்கூடும். வணிகத்தின் பொருட்டு உலகம் முழுவதும் இருந்த மக்கள் இப்பூமிப் பந்தைச் சுற்றத் தொடங்கியபொழுதே, பொருள்களுடன் அவர்கள் மொழியையும் பண்டமாற்றுச் செய்திருப்பார்கள்.
              நம் வழக்கத்தில் இல்லா பொருள்களை பிற நாடுகளிடம் இருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கியபொழுது, அப்பொருளுடன், அப்பொருளுக்கான அம்மொழியின் பெயரையும் சேர்த்தே பெற்றிருப்போம்.
            தமிழிலிருந்து வெளிச்சென்ற பொருள்களும் நம் தமிழ்ச்சொற்களுடன் சேர்ந்துதான் போயிருக்கும். உலகம் முழுக்க உள்ள தொன்ம மொழிகளில் பல சொற்களுக்கான வேர்ச் சொல்லாகத் தமிழ் இருப்பதை இன்றைய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
           இஸ்லாமியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு நிறைய கொடுக்கல் - வாங்கல்கள் இருந்தன. மொழிசார்ந்தும் கலாசாரம் சார்ந்தும் தமிழ் பல மாற்றங்களை உள்வாங்கியது. ஆங்கிலேய ஆட்சி நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது.
            ஆங்கிலேயர்களுடன் நமக்கு நிறைய இயந்திரங்களும், போக்குவரத்து வசதிகளும் வந்தன. தண்டவாளம் வந்தது. ரயில் வந்தது. தபால் வந்தது. வந்த புதிதில் நாம் அப்படியே ஆங்கிலச் சொற்களுடன்தான் ஏற்றுக் கொண்டோம். பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.
             நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். "தொடர்வண்டி' என்பதைவிட "ரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. "வானொலி'யைவிட "ரேடியோ' பிடித்திருக்கிறது. பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப் பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம்.
        கலைச்சொற்களுக்காக, தொழில்நுட்பப் பெயர்களுக்காக நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து நிற்பதுகூட நமக்கு இழுக்கென அறிவியல் தமிழ்ச்சொற்கள் உருவாக்கும் தமிழறிஞர்கள் வேதனைப்படுகிறார்கள். நாமோ அன்றாட உரையாடல்களிலேயே அன்னிய மொழியை அனுமதிக்கிறோம். தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் எல்லோரும் நிற்கிறோம்.
           "மம்மி'களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஒருபோதும் "அம்மா'க்களை "மம்மி'யாக்க அனுமதியோம். "ம்மா' மொழியின் ஒற்றைச் சொல் அல்ல. ஐயாயிரம் ஆண்டு தமிழ் வாழ்வின் தொடர்ச்சி. உலகின் கடைசி மனிதன் வாழும் வரை, தமிழன் தமிழைச் சரியாக உச்சரிக்க மொழியைக் காப்போம். . .

    Monday, August 16, 2010

    தமிழனின் பெருமை!

                        
                        தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைத் தஞ்சையில் செப்டம்பர் 25,26-ம் தேதிகளில் நடத்துவது என முடிவு செய்திருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் களி(ளை)ப்பில் தஞ்சைப் பெரிய கோயில் மறக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருந்த நேரத்தில், தமிழக அரசு இந்த விழாவை அறிவித்திருக்கிறது. இதற்காகத் தமிழக முதல்வரை தினமணி பாராட்டுகிறது.

                         ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது. கிரானைட் கற்கள் இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது. இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
                 தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை? தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா? இந்தியப் பெருமை இல்லையா! (தாஜ்மஹாலுக்கு 500-வது ஆண்டு என்றால் சும்மா இருக்குமா இந்திய அரசு?)

                        தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. இது போதாது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு கலைச் சின்னத்தின் பெருமையை இரு நாள் விழாவில் அடைத்துவிடக் கூடாது. இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும் ராஜராஜ சோழன் நிறுவிய கடல் கடந்த வெற்றிகள் என அந்தப் பேரரசனின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா ஒரு தொடர்ச்சியான திட்டத்தைக் கொண்டு அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் என்றால் மட்டுமே தமிழர் பெருமையை உலகம் அறியும். அதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான். 

                        ராஜராஜ சோழன் தனது அரசை பல பகுதிகளாகப் பிரித்து, நிர்வாகிகளை நியமித்து, சரியான கண்காணிப்பு மற்றும் வரிவசூல் முறைகளை ஏற்படுத்திய அரசன். கிராமங்களில்கூட தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் மக்களாட்சி முறைகண்ட சோழன். வேளாண் சாகுபடியை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியும், அதன் நடுவே கோயிலையும், அந்தணர் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்கி அவர்களைக் குடியேற்றியும் கோயில், கல்வி ஆகியவற்றின் தொடர்பு அற்றுப்போகாமல் பார்த்துக்கொண்ட அரசன் ராஜராஜன்.   

                        ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான். இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது. "பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்' என்பதுதான் உண்மைநிலை.   
                                                       
                        எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை. இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா? இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?   
             
                        இக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்கும் ஓர் ஆவணப் படத்தைத் தமிழக அரசு தயாரித்து, அவற்றை குறுவட்டுகளாக வெளியிட்டால் தமிழர் அனைவருமே இக் கோயிலின் பெருமையை உணர ஏதுவாக அமையும்.   108 கர்ணங்களில் (நாட்டிய அடவுகள்) தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு மேல்தளத்தில் உள்ள புறச்சுவரில் 81 கர்ணங்கள் உள்ளன. மீதமுள்ள 27 கர்ணங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சிலைகள் முழுமையாக்கப்படவில்லை, ஏன் என்கிற கேள்வி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்களில் சு. சிற்பி திருநாவுக்கரசு, பு. கார்த்திகா இருவராலும் எழுப்பப்பட்டது. இதற்கான ஆய்வுகள் வேறு உண்மைகளைத் திறக்க உதவக்கூடும்.தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது.                          

                        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார். இதைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ராஜராஜ சோழன் குறித்தும், அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்!



    நன்றி: தினமணி நாளிதழ்.

    Monday, August 9, 2010

    தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!

              
                    ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...

    அச்சுறுத்த வேண்டா:

                ""தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா. தமிழில்,


    ""எழுத்தெனப் படுவ
    அகரமுதல் னகர இறுவாய்
    முப்பஃது என்ப...''   


    என்றார் தொல்காப்பியர். ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள. கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?


                  ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை. அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே (silent) உச்சரிக்க வேண்டும் (psychology -சைக்காலஜி). சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், (put -புட்;but-பட்) இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை. என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.


                  தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. ka -கந்தசாமி, ga -கணேசன்; cha-சதுப்புநிலம், sa-சட்டம்; tha-தம்பி, dhu-துரை; pa-பம்பரம், பட்டம், கம்பன் (ba). இத்தகைய ஒலி வேறுபாடுகள் வடசொற்கலப்பினால் வந்தவை.
     
    தமிழ் இயற்கை மொழி:

                   மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை-எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி-இயற்கைமொழி தமிழேயாகும். எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து ""என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?''  என்போமன்றோ?  வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "அ'. சற்று அதிகம் திறந்தால்  "ஆ' தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே-இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

    ஒலிப்பு-உச்சரிப்பு:

                    இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும். நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை. தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம். தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள். தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள். "தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும். 


                      ""என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர். நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்'சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும். இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

    நுண்ணொலி வேறுபாடுகள்:
     
                         தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அதனால், "சார் இங்கே என்ன "ல'னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர். பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள். மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல'கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள'கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ'கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும். இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

    எடுத்துக்காட்டுகள்:

    தால் - நாக்கு, தாள்-எழுதும்தாள்,
    பாதம் (அடி);
    தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);
    வால் - தூய்மை (வெண்மை)-வாலறிவன், வாலெயிறு;வாள் - வெட்டும் கருவி,வாழ் - வாழ்வாயாக

    இப்படிப்பல காட்டலாம்.

    (தமிழ் வளர்ப்போம்).



    நன்றி:

    தினமணி நாளிதழ் மற்றும் கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்கள். . .

    Friday, August 6, 2010

    சலனங்கள். . !


    பிரிதலும் சேர்ந்திருத்தலும்
    நிரந்தரமில்லை என்றுணர்ந்தபோதும்
    பிரிதலில் சலனம்
    கொள்கின்றோம்  நாம். . !

    என்னே சூட்சமக்காரி நீ ?



    உன் முகம் பார்த்திராத வரை
           பேசத் துடிக்கின்றேன்
    உன் விழி பார்த்த தருணம்
          பேசாமல் ஊமை ஆகின்றேன்
    உந்தன் காந்தப் பார்வைதன்னில்
          எம் குரல்வளை சிதறுகின்றதோ..!





    மலர்களைக் கூடப் பறிக்க
         மனமில்லாதவள் நீ
    என் மனதை மட்டும்
         பறித்துக் கொண்டாயே?

    மௌன விரதம் என்கிறாய்
          விழிகளால்  பேசுகின்றாய்

    என்னே சூட்சமக்காரியடி  நீ ?

    Thursday, August 5, 2010

    என் கல்லூரி வாழ்க்கை. . !


    தனித்தனியாய் அழகழகாய்
         வெள்ளை வர்ண கட்டிடங்கள்


    அழகுக்கழகு சேர்ப்பதற்காய்
        வேலி பின்னப்பட்ட பூங்காக்கள்

    மனிதமனத்தை வருடுவதாய்
        ரீங்கார ஓசைபாடும் பறவைகள்

    மாணவர்க்கு வழிகாட்டிகளாய்
        வழி அறிந்திராத ஆசிரியர்கள்

    ஆசிரியரை சீர் பார்ப்பதற்காய்
        குழுமம் கண்ட நிர்வாகிகள்

    இவற்றோடு எதார்த்தமாய்
        குழுமம் குழுமமாய் மாணவர்கள். . !


    எதிர்நோக்குகின்ற இலட்சியங்கள்
        ஆர்ப்பரித்து வினாத்தொடுக்க

    ஏமாற்றமடைந்த நினைவுகள்
        அழுகுரலில் சீண்டிப் பார்க்க

    எதார்த்தமான புன்னகையோடு
         நண்பர்கள் கரம் கோர்க்க

    கலக்கமாய் பயணித்தது 
         என் கல்லூரி வாழ்க்கை. . !

    பேருந்து நிறுத்தம். . !

    ஓர் அந்தி மழைக்காலம் !
    மாநகரப் பேருந்தில்
    சன்னலோரத்து இருக்கையில்
    முன்னவர் சாளரத்தை தாழிட
    விசாலமான சாரலில்
    நனைந்து கொண்டிருந்தேன் நான். . .

    பேருந்து நிறுத்தம்!
    சாலையின் அடுத்த விளிம்பில்
    சாரலில் முழுவதுமாய் நனைந்த
    பெருமிதத்தோடு அவள்,
    அவளை ரசித்ததை
    உணர்ந்து விட்டால் போலும்
    சட்டென்று பின்வாங்கியவள்
    மழைநீர் வடிந்த விழிகளில்
    மௌனமொழி பேசினாள். . .

    முந்நூறு வினாடிகளே
    நீடித்தன என்றபோதும்,
    முந்நூறு நாட்கள் கடந்தும்
    பசுமையான புரிதலை
    நிரப்பிச் செல்கின்றது
    அந்தப் பேருந்து நிறுத்தம் . . .

     

    Wednesday, August 4, 2010

    தாய்மைக்கு அழகு. . .!

               நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் 17 லட்சம் குழந்தைகள் ஒரு வயது நிறைவடையும் முன்னரே இறந்து விடுகின்றனர். 22 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதை தொடும் முன்னர் இறக்கின்றனர். நாட்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் 5 பச்சிளம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரம் கூறுகின்றது. தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 22 குழந்தைகள்இறந்து போகின்றன. மேற்கூறிய அனைத்துக்கும் , குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்காததே காரணம்.

    சீம்பாலின் அவசியம் ?
               எல்லா குழந்தைகளுக்கும் பிறந்து அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தாயின் சீம்பாலை அவசியம் கொடுக்க வேண்டும். தவறான வழிகாட்டுதலால், பெரும்பாலோனோர் அதைத் தவிர்த்து விடுகின்றனர். நோய் எதிப்பு சக்தியைப் பெற்றுக்கொள்ள இந்த சீம்பால் உதவும். குறைந்தது 6 மாதம் முடியும் வரையாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு வயது வரை அல்லது அதற்க்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

    தாய்ப்பாலின் நன்மை:
                தாய்ப்பால் ஊட்டுவதால் தாயுக்கும் சேயுக்குமான நெருக்கம் அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு சரியான அளவு ஊட்டச்சத்து  கிடைக்கும். தாய்ப்பால் பெற்ற குழந்தைகள் அதிக அறிவுத்திறனுடனும், நல்ல உடல் வளர்ச்சியும் பெறுகின்றனர். சர்க்கரை நோய், காத்து சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல், குழந்தைப் பருவத்தில் வரும் புற்றுநோய், மூட்டு வாதம், கண் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் வரும் வாய்ப்பு மிக மிகக்  குறைவு.  

    தாய்க்கும் நன்மை:
             தாய்ப்பால் ஊட்டுவது, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.தாயின் விரிவடைந்த கருப்பை விரைவில் சுருங்கி பழைய நிலையை அடைய  உதவுகின்றது. தாய்மார்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மனதளவில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

    எப்போதெல்லாம்?
              குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாக பால் குடிபதற்கு ஆவலாக இருக்கும். இந்நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது எளிது. பிறந்தவுடன் கொடுக்கவில்லை என்றால், சிறிது நேரத்தில் குழந்தை தூங்கிவிடும். அதன்பின் சிரமம் ஏற்படும். குழந்தைக்கு எப்போதெல்லாம் தேவைபடுகின்றதோ, அப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.24 மணி நேரத்தில் குறைந்தது எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை நோய்வாய்ப் பட்டு இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


    தாய்மார்களே! குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். அது உங்களையும் ஆரோக்கியமாய் வைக்கும். 



    நன்றி:

    தினமணி நாளிதழ் . . .

    Tuesday, August 3, 2010

    இன்றைய இந்தியா . . . !

                 லால்பகதூர் சாஸ்திரி என்றொரு மாமனிதர் இந்திய அரசியலில் பல்வேறு தியாகங்களைப் புரிந்து தனக்கென இடம் பிடித்தவர். முன்னாள் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1951 முதல் 1956 வரை பணியாற்றியவர்.1956-ல் மகபூப் நகர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பெரிய ரயில் விபத்து இதுதான். விபத்தைத் தொடர்ந்து, அந்தத் தவறுக்கும் உயிரிழப்புக்கும் தார்மிகப் பொறுப்பு ஏற்றுத் தனது பதவியைத் துறக்க முன்வந்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சாஸ்திரியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.அடுத்த மூன்றாவது மாதமே, 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இன்னொரு பயங்கரமான ரயில் விபத்தை இந்தியா சந்திக்க நேர்ந்தது. அரியலூர் பாலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 129 பேர் இறந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த முறை, இனியும் அமைச்சராகத் தான் தொடர்வது சரியல்ல என்று லால்பகதூர் சாஸ்திரி தீர்மானமாகச் சொன்னபோது, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு சொன்ன வார்த்தைகள், இன்றைய ஆட்சியாளர்கள் அனைவருக்குமே பாடமாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?""எங்கேயோ நடந்த தவறுக்கு, அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஏன் ராஜிநாமா செய்து பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தார்மிகப் பொறுப்பேற்கும்போதுதான், அவரது தலைமையில் இயங்கும்  அத்தனை பேருமே பொறுப்புடன் செயல்படுவார்கள். நாம் குடிமக்களின் நலனுக்காகப் பதவி வகிப்பவர்கள். அவர்களது நலனைப் பாதுகாக்க அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். இதை மனதில் கொண்டு, தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்திருக்கும் லால்பகதூர் சாஸ்திரியின் முடிவு, வருங்கால சுதந்திர இந்தியாவில் பதவிக்கு வரும் மக்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நல்லதொரு முன்னுதாரணமாக அமையும். மனதைக் கல்லாக்கிக் கொண்டு ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமாவை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் ஜவாஹர்லால் நேரு தந்த விளக்கத்தை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை அடைவதில் அர்த்தம் இல்லை. காரணம்,இவர்கள் அவர்கள் அல்லவே!கடந்த மே மாதம் 28-ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் 146 உயிர்கள் பலியானபோது, அது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதிச் செயல் என்பது ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாகத் தெரிந்தது. இதோ, திங்கள்கிழமை மீண்டும் கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. தூரத்திலுள்ள சைந்தியா ரயில் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்து நிச்சயமாக எந்தத் தீவிரவாதப் பின்னணியும் இல்லாதது என்பதும் தெள்ளத் தெளிவு.சைந்தியா ரயில் நிலையத்திலிருந்து வனாஞ்சல் விரைவு ரயில் அப்போதுதான் புறப்படுகிறது. அந்தநேரத்தில், சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் அதே தண்டவாளத்தில் விரைந்து வந்து, வனாஞ்சல் விரைவு ரயிலில் மோதுகிறது.இரவு நேரம். எல்லோரும் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள். நமது இந்திய அரசின் பார்வையில், வசதி இல்லாத, முன்பதிவு செய்யாத, செய்ய வழியில்லாத பராரி ஏழைகள் மனிதர்களே அல்லவே. அவர்களை நாம் இந்தியக் குடிமக்களாகக் கருதுவதே கிடையாதே. அதனால்தானே, ரயில் எஞ்சினுக்கு அருகே உள்ள முதல் மூன்று பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளாக இணைக்கப்படுகின்றன. எந்த விபத்து ஏற்பட்டாலும் முதல் பலி, இவர்களாகத்தான் இருக்கும்.தூங்கி வழிந்து கொண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அடைந்து கிடந்த சாதாரண இந்தியக் குடிமக்களை மரணம் எதிர்பாராதவிதமாகத் தாக்கியதன் பின்னணியில் இருந்தது சதியல்ல. பொறுப்பற்ற தனம்.ஒரு தண்டவாளத்தில் ஒரு ரயில்தான் பயணிக்க முடியும். அப்படியானால், தூக்கக் கலக்கத்தில் உத்தர் பங்கா விரைவு ரயில் வருவதை எதிர்பார்த்து முறையாக சிக்னலைப் போடாமல் விட்டு விட்டார்களா? இல்லை, சிக்னல் இருப்பதைக் கவனிக்காமல் உத்தர் பங்கா விரைவு ரயிலின் ஓட்டுநர் அதே தண்டவாளத்தில் வந்துவிட்டாரா? சிக்னல் போடப்பட்டிருந்தால் தண்டவாளம் தானாகவே இன்னொரு நடைமேடைக்கு உத்தர் பங்கா ரயிலைத் திருப்பிவிட்டிருக்க வேண்டுமே, ஏன் அப்படிச் செய்யவில்லை?அதெல்லாம் போகட்டும். சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் மெதுவாகத்தானே நுழைந்திருக்க வேண்டும். விரைவாக வந்ததன் காரணம் ரயிலில் ஓட்டுநர் தூங்கி விட்டதாலா? இதற்குப் பதில் சொல்ல அந்த ஓட்டுநர் இப்போது உயிருடன் இல்லை.ரயில்வே லாபத்தில் ஓடுகிறது என்று பெருமை தட்டிக் கொள்ளும் ரயில்வே நிர்வாகம், மிக அதிகமான அளவில் எல்லா ரயில்களிலும் பெட்டிகளை அதிகரித்திருக்கிறது. எல்லா தடங்களிலும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரக்கு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, தண்டவாளங்களின் தரமும் (க்வாலிடி), பலமும் (ஸ்ட்ரென்க்த்), சக்தியும் (பவர்) அதிகரித்திருக்கிறதா என்பது சந்தேகமே.பழைய தண்டவாளங்களில், பழைய தொழில்நுட்பங்களுடன் கணக்கு வழக்கில்லாமல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து லாபம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அதன் விளைவுதான் இத்தனை விபத்துகள் என்று ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எச்சரிப்பது கேட்கிறது.கடந்த பத்து மாதங்களில் இதுவரை 14 ரயில் விபத்துகள் நடந்தேறிவிட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி விட்டன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேரமில்லை. அவருக்கு மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றி, முதல்வர் பதவியில் அமர்வது மட்டும்தான் ஒரே குறிக்கோள். இந்த ரயில் விபத்தைக்கூட மேற்குவங்க அரசின் கையாலாகாத்தனம் என்று அவர் வர்ணிக்க முற்படலாம்.மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய இன்னொரு லால்பகதூர் சாஸ்திரியும் அல்ல; மன்மோகன் சிங் அதை ஏற்றுக்கொள்ள பண்டித ஜவாஹர்லால் நேருவும் அல்ல. இன்றைய இந்தியா, அன்றைய தலைவர்கள் கண்ட கனவும் அல்ல!



    நன்றி: தினமணி நாளிதழ்