Saturday, August 21, 2010

தமிழா, நீ பேசுவது தமிழா?


             ஹாய் வியூவர்ஸ், இன்னைக்கு நம்ப ஷோவுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாருன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸô இருக்கும். ப்ளீஸ், இப்ப ரெடியா இருங்க அவங்கள வெல்கம் பண்ண. அதுக்கு முன்னாடி சின்ன கிளாப் பண்ணுங்க'.
           "நீங்க ரொம்ப லைக் பண்ற "சாங்'க கேட்கிறதுக்கு முன்னாடி, இப்ப சிட்டியோட டிராபிக் கண்டிஷனைப் பார்ப்போம்.
           ஒகே. டா. ஈவ்னிங் மீட் பண்ணலாம். கண்டிப்பா பிலிம் போறோம். ஒகே.வா. பை!.
       மேற்குறிப்பிட்ட உரையாடல்கள் தமிழகத்தில் செம்மொழியின் பெருமைக்குரியவர்களான நாம் பேசும் அன்றாடப் பேச்சுகளே. தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், நண்பர்களுடனான உரையாடல்களில் புழங்கும் தமிழுக்கு உதாரணங்கள்.
          "உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.
           நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. இன்றுள்ள தமிழ் வேறு. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதி வரை தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத் தமிழே பேச்சுவழக்காகவும், இலக்கிய வழக்காகவும் இருந்தது. மொழிக்கலப்பை எதிர்த்து ஓர் இயக்கமே உருவான பெருமையும் சிறுமையும் தமிழுக்கே உரியது.
           தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழின்மேல் இருந்த தீராக் காதலால் கட்டியமைத்தார்கள். தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்தைப் பிரித்தெடுத்தது. இன்று சம்ஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் வந்து உட்கார்ந்துவிட்டது. ஸ்ரீதரன் எல்லாம் திருக்குமரன் ஆனார்கள். மீண்டும் இப்பொழுது விக்கியும், மிக்கியுமாக நம் பிள்ளைகள்.
         உலகம் முழுவதும் வாழும் இனத்தினர் தங்களுக்குள் தாய்மொழியில்தான் பேசிக்கொள்கிறார்கள். படித்த தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். தாய்மொழியில் பேசிக்கொள்வதும், மொழியைக் கலப்பின்றிப் பேசுவதும் ஏன் நாகரிகக் குறைவான செயலாக, படிக்காதவர்களின் பழக்கமாகப் பார்க்கப்படுகிறது?
        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தொடக்கவிழாவில் பேசிய தமிழறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி ஒரு கருத்தை வலியுறுத்தினார். ""உலகில் உள்ள 6,000 மொழிகளில் 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழித் தகுதி உள்ளது. 6 மொழிகளிலும் தமிழ் மட்டுமே இன்றும் மக்கள் பேசும் மொழியாக உள்ளது'' என்று.
     கடந்த இருபதாண்டுகளில் தமிழின் பேச்சுவழக்கு படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. பேச்சின் வழியாகவே ஒவ்வொரு குழந்தையும் மொழியை உள்வாங்கிக் கொள்கிறது. பேச்சின் மூலமே ஒரு மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும். இன்றைக்குப் பிறந்து வளரும் ஒரு குழந்தை நம் மொழியை எப்படி உள்வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துப் பார்த்தால் ஆழ்பள்ளத்தில் விழுகிறார்போல் கிடுகிடுவென நடுங்குகிறது நெஞ்சம்.
          நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் உள்ள குடும்பங்களில் அம்மா-அப்பாவின் பேச்சுகளைக் கேட்கும் நேரத்தைவிட, ஒரு குழந்தை, தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் குரலைக் கேட்கிறது. ஒளி - ஒலி ஊடகத் தொகுப்பாளர்களுக்கு நல்ல தமிழ் தெரியக்கூடாது என்பதுதான் முதல் தகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தமிழை அவ்வளவு வேகமாக உச்சரிக்கவே முடியாது. ஆங்கிலத்தை உச்சரிக்கும் லாவகத்துடன், தமிழை விழுங்கி உச்சரித்து தமிழே நாவின் அடியில் அமுங்கிப் போகிறது.
           ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களை இன்னும் தங்கள் பிடியில் வைத்திருப்பவை செய்தித்தாள்கள். வெகுஜன ஊடகங்களில் அன்றாடச் செய்திகளுக்காக மக்கள் இன்னும் தினசரிகளையே சார்ந்திருக்கிறார்கள். கிராமத்து அரசமரத்து தேநீர்க் கடை தொடங்கி, அலுவலகங்கள்வரை செய்தித்தாளின் இருப்பு மிக முக்கியமானது. ஆங்கிலக் கலப்பில்லாத தலைப்புகளையும், செய்திகளையும் ஒருகை விரலுக்குள் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையிலான பத்திரிகைகள் மட்டுமே வெளியிட்டு வருகின்றன.
           அநேகப் பத்திரிகைகளின் தலைப்புகளைப் பார்த்தால் நாம் படிப்பது தமிழ் நாளிதழ்தானா என்ற குழப்பமே மிஞ்சும். "மந்திரிசபை டிஸ்மிஸ், மாஜி அமைச்சருக்கு கல்தா, கைதிக்கு வாரண்ட்' இந்தத் தலைப்புகள் சொல்லும் உண்மை என்ன? நாம் தமிழில் சிந்திப்பது குறைந்து ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கி விட்டோம் என்பதா?
         தொலைக்காட்சிகளில் எத்தனை தொலைக்காட்சிகளுக்குத் தமிழில் பெயர் உள்ளன? பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க ஒரு காலவரையறை வைத்ததைப்போல்,திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க ஊக்கத்தொகை வழங்கியதைப்போல் தொலைக்காட்சிகளுக்கும் பெயர் மாற்றம் செய்யலாமே? நிகழ்ச்சிகள் பெரும்பான்மைக்கு ஆங்கிலப் பெயர்கள்.
          படித்த, நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் தமிழில் உரையாடுவது அருகி வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களின் பல தனியார் அலுவலகங்களுக்குச் சென்றால் அத்தனையும் ஆங்கிலம்.
         அமெரிக்கத் தூதரகத்துக்கோ, பிரிட்டிஷ் தூதரகத்துக்கோ வந்துவிட்ட திகைப்பு. தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? "தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ?
        பரவலாகிவிட்ட ஆங்கிலவழிக் கல்விதான் மொழிக் கலப்புக்கான அடிப்படையா என்று யோசித்தால், தமிழகத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்களே ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். மீதமுள்ள 80 சதவீத மாணவர்கள் தமிழ் வழியில்தான் பயில்கிறார்கள்.
        தமிழகத்தில் உள்ள ஆங்கிலக் கல்வியின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கிடையாது. "வாட்' மா? "டெல்' மா, "ரீட்' பண்ணு, "ரைட்' பண்ணு போன்ற அரைகுறை வாக்கியங்கள்தான்.
      தமிழிலும் புலமை பெறாமல், ஆங்கிலத்திலும் புலமை பெறாமல் இரண்டுங்கெட்டானாகி விடுகிறார்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள். மாநகரங்களில் உள்ள சில பள்ளிகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.
        எந்த மொழியின் கலப்பின்றியும் நம்மால் பேச முடியாதா? எழுத முடியாதா? நிச்சயம் முடியாது. இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கும்பொழுதே மொழியின் கலப்பு உருவாகியிருக்கக்கூடும். வணிகத்தின் பொருட்டு உலகம் முழுவதும் இருந்த மக்கள் இப்பூமிப் பந்தைச் சுற்றத் தொடங்கியபொழுதே, பொருள்களுடன் அவர்கள் மொழியையும் பண்டமாற்றுச் செய்திருப்பார்கள்.
          நம் வழக்கத்தில் இல்லா பொருள்களை பிற நாடுகளிடம் இருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கியபொழுது, அப்பொருளுடன், அப்பொருளுக்கான அம்மொழியின் பெயரையும் சேர்த்தே பெற்றிருப்போம்.
        தமிழிலிருந்து வெளிச்சென்ற பொருள்களும் நம் தமிழ்ச்சொற்களுடன் சேர்ந்துதான் போயிருக்கும். உலகம் முழுக்க உள்ள தொன்ம மொழிகளில் பல சொற்களுக்கான வேர்ச் சொல்லாகத் தமிழ் இருப்பதை இன்றைய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
       இஸ்லாமியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு நிறைய கொடுக்கல் - வாங்கல்கள் இருந்தன. மொழிசார்ந்தும் கலாசாரம் சார்ந்தும் தமிழ் பல மாற்றங்களை உள்வாங்கியது. ஆங்கிலேய ஆட்சி நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது.
        ஆங்கிலேயர்களுடன் நமக்கு நிறைய இயந்திரங்களும், போக்குவரத்து வசதிகளும் வந்தன. தண்டவாளம் வந்தது. ரயில் வந்தது. தபால் வந்தது. வந்த புதிதில் நாம் அப்படியே ஆங்கிலச் சொற்களுடன்தான் ஏற்றுக் கொண்டோம். பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.
         நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். "தொடர்வண்டி' என்பதைவிட "ரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. "வானொலி'யைவிட "ரேடியோ' பிடித்திருக்கிறது. பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப் பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம்.
    கலைச்சொற்களுக்காக, தொழில்நுட்பப் பெயர்களுக்காக நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து நிற்பதுகூட நமக்கு இழுக்கென அறிவியல் தமிழ்ச்சொற்கள் உருவாக்கும் தமிழறிஞர்கள் வேதனைப்படுகிறார்கள். நாமோ அன்றாட உரையாடல்களிலேயே அன்னிய மொழியை அனுமதிக்கிறோம். தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் எல்லோரும் நிற்கிறோம்.
       "மம்மி'களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஒருபோதும் "அம்மா'க்களை "மம்மி'யாக்க அனுமதியோம். "ம்மா' மொழியின் ஒற்றைச் சொல் அல்ல. ஐயாயிரம் ஆண்டு தமிழ் வாழ்வின் தொடர்ச்சி. உலகின் கடைசி மனிதன் வாழும் வரை, தமிழன் தமிழைச் சரியாக உச்சரிக்க மொழியைக் காப்போம். . .

No comments:

Post a Comment