Monday, August 2, 2010

எண்ணிக்கை பெரிதல்ல...!

                   இந்திய அளவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 22 கோடிப் பேரில் 12.4 விழுக்காடு மாணவர்கள்தான் கல்லூரி வாசலைத் தொடுகின்றனர். உயர்கல்விக்கு வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கக் காரணம், உயர் கல்வி தனியார்மயமாகிப் போனதால் ஏற்பட்டுள்ள மிகஅதிகமான கல்விக் கட்டணம்தான். இது ஒருபுறம் இருக்க, இந்த 12.4 விழுக்காடு பேரும்-அதாவது சுமார் 4.5 கோடிப்  பேர்-தொழில்திறன் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்றால், இதற்குக் கிடைக்கும் பதில், மிகமிகக் குறைவு என்பதுதான். கலை அறிவியல் பட்டம் பெறுவோர் மட்டுமல்ல, பொறியியல் பட்டம் பெறுவோர்கூட ஏட்டளவில் மதிப்பெண் பெறும் புத்தகத் திறனாளர்களாக இருக்கிறார்களே தவிர, அவர்கள் செயல்திறனாளர்களாக இல்லை. அவ்வாறு அவர்களுக்குச் செயல்திறனைக் கற்றுத்தரும் நிலையங்களாகப்  பல்கலைக்கழகங்களும் அவற்றின் பாடத்திட்டம், கற்பித்தல் முறை எதுவுமே பெரிய மாறுதலைக் காணவில்லை.     

             மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமன்றி, கலை அறிவியல் கல்லூரிகளில்கூட தரமான, கல்வியில் ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதும், இவ்வாறாக வெறும் திறமை பெறாத பட்டதாரிகள் உருவாக ஒரு முக்கிய காரணம். இப்போது பணியில் இருக்கிற பேராசிரியர்கள் முழு ஈடுபாட்டோடும், மனசாட்சியோடும் பணியாற்றினாலே போதும், இந்தப் பட்டதாரிகளைத் திறமை பெற்றவர்களாக மாற்றிவிட முடியும். அத்தகைய விடியல் ஏற்படும் என்கிற நம்பிக்கை வெறும் ஏக்கமாகவே ஆகிவிடும் போலிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலும்கூட, இந்திய இளைஞர்கள் திறமையாக இருக்கவே செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய இளைஞர்கள்-பெரும்பாலும் பொறியியல், கணினி, மருத்துவம் சார்ந்த துறைகளில் இயல்பாகவே கல்வியோடு திறமை பெற்றவர்களாகவும் வெளிவரத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்களை, அப்படியே அள்ளிச் செல்ல-அறிவுக் கடத்தல் என்றும் சொல்லலாம்-பன்னாட்டு நிறுவனங்கள் தயாராகக் காத்திருக்கின்றன. இவர்கள் இந்தியாவிலேயே பணியாற்றினாலும்கூட, அவர்கள் பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியாவில் ஊழியம் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2005-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின்படி, இந்தியாவில் சிறந்த தொழில்திறன் பட்டதாரி உருவாக ஆகும் செலவு அமெரிக்க மதிப்பில் 20,000 டாலர்கள் மட்டுமே. இவ்வளவு குறைந்த செலவில் அவர்களால் ஒரு அமெரிக்கனை தொழில்திறன் பெற்ற பட்டதாரியாக உருவாக்குவதை கனவிலும் கருதிட முடியாது. ஆகவே, இந்தியாவின் மிகச் சிறந்த பட்டதாரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இவ்வாறாக இந்திய அறிவு கொள்ளை போவதால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பின் அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! இப்போது இந்த அளவு மேலும் உயர்ந்திருக்கும்!தற்போது நடைமுறைக்கு வரக் காத்திருக்கும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் சொல்லும் வாதம், இந்திய இளைஞர்கள் வெளிநாடுபோய் படிப்பதால் இந்தியாவுக்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதுதான். ஆனால் இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே கல்விக் கடை விரிக்கும்போது, தங்கள் நாடுகளில் வேலை உறுதி என்கிற இனிப்பைக் காட்டி, இந்தியாவின் சிறந்த அறிவார்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லப்போகிறார்கள். சிறந்த இளைஞர்களை இழக்கப்போவது இந்தியாவாகத்தான் இருக்கும்.நிலைமை இதுவாக இருக்கும்போது, 2020-ம் ஆண்டில் கல்லூரி செல்வோர் எண்ணிக்கையை 6 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக புதிதாக 800 பல்கலைக்கழகங்களும், 35,000 புதிய கல்லூரிகளும் உருவாக வேண்டும் என்றும் இலக்குகளை அறிவித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல்.சொல்லித்தர நல்ல, திறமையான, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. உயர் கட்டணங்களைக் கட்டுப்படுத்தவும் அரசு முயற்சி செய்யவில்லை. பாடத்திட்டங்களும் பழையபடிதான் இருக்கின்றன. அமைச்சர் சொல்லும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நிச்சயமாகத் தனியாரால் மட்டுமே நிறுவப்படும். இவர்கள் போட்டி போட்டு மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டு, பெயருக்குப்  பட்டம் வழங்கி வெளியே அனுப்பினால் இவர்கள் என்ன தொழில்திறன் பெற்றிருப்பார்கள்? இவர்களுக்கு யார் வேலை தர முன்வருவார்கள்?இந்த வேளையில், நமக்குச் சமமான மக்கள்தொகை உள்ள சீனாவில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தாக வேண்டியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் அண்மையில், நடுத்தர மற்றும் நீண்ட கால திறன் மேம்பாட்டுத் திட்டம் (2010-2020) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 2008-ம் ஆண்டு 9.2 விழுக்காடாக இருக்கும் திறன்கொண்ட, பயிற்சிபெற்ற பணியாளர் எண்ணிக்கையை, 2020-ம் ஆண்டில் 20 விழுக்காடாக உயர்த்துவதுதான். 2020-ல் சீன அரசு ஊழியர்களில் 85 விழுக்காட்டினர், நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படித்தவர்களாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், உயர்கல்வி பெற்றவர்களில் 30 லட்சம் பேரை, விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கிராமங்களுக்கு அனுப்புவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம்.ஆனால், இந்தியாவிலோ வெறும் எண்ணிக்கையைப் பெருக்குவதில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுகிறது. இப்போதே, பட்டதாரிகள் பலரால் நேர்காணல்களை எதிர்கொள்ள முடியாத, வேலையில்லாத நிலை உருவாகிவிட்டது. இந்தப் புதுக்கூட்டத்தில் பொறியியல் பட்டதாரிகளும்கூட சேர்ந்து கொண்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் எண்ணிக்கையைக் கூட்டுவதில் ஆர்வம் காட்டாமல், திறமையும் தொழில்அறிவும் பயிற்சியும் பெற்றிருக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதுதான் இன்றியமையாத் தேவை. வெறுமனே பட்டதாரிகள் எண்ணிக்கையைக் கூட்டினால் அது, தனியார் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும். பட்டம் பெறுவோரின் வீட்டுப் பொருளாதாரத்தையோ, நாட்டுப் பொருளாதாரத்தையோ மேம்படுத்த உதவாது.




நன்றி:

தினமணி நாளிதழ் . . 

No comments:

Post a Comment