Thursday, November 25, 2010

பிகார் தெரிவிக்கும் செய்தி!

                        பிகார் சட்டப்பேரவை முடிவுகள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணிக்கும், ராகுல் காந்தியின் செல்வாக்கை நம்பித் தனித்துக் களமிறங்கிய காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், அரசியல் நோக்கர்கள் பார்வையில் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. காங்கிரஸம் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணியில் இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இந்த அளவுக்குப் படுதோல்வியைச் சந்தித்திருக்காதே தவிர, நிதீஷ் குமாரின் தலைமையிலான ஆளும் கூட்டணியின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது என்பதுதான் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் பாடம்.
                          முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி, பிகாரிலுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கில் மூன்று பங்கு இடங்களை வென்று வரலாறு காணாத வெற்றியை அடைந்திருக்கிறது. 2005 சட்டப்பேரவைத் தேர்தலில் 36% வாக்குகளையும், 2009 மக்களவைத் தேர்தலில் 38% வாக்குகளையும் பெற்ற இந்த அணி, இப்போது மேலும் 2% வாக்குகள் அதிகமாகப் பெற்றிருப்பது ஆளும் கூட்டணியின்மீது மக்களுக்கு அதிகரித்துவரும் நம்பிக்கையின் அடையாளம் என்றுதான் கூற வேண்டும்.2005 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் 63% இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் 82% இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 54% இடங்களை மட்டுமே வெற்றிபெற்றதுபோக, இப்போது 2010 சட்டப்பேரவைத் தேர்தலில் 89% இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது, 10 இடங்களில் போட்டியிட்டால், அதில் 9 இடங்களை வென்றிருக்கிறது.

                   இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி பல சோதனைகளையும், எதிர்ப்புகளையும் நேரிட வேண்டிய சூழ்நிலை. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல்கள் ஒருபுறம். அயோத்திப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிறுபான்மையினரை ஆளும் கூட்டணிக்கு எதிராக ஒருங்கிணைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம். செல்லும் இடமெல்லாம் ராகுல் காந்திக்குக் கிடைத்த வரவேற்பும், கூட்டமும், காங்கிரஸôர் மத்தியில் எழுந்த எழுச்சியும் ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்கு வங்கியைத்தான் கணிசமாகப் பாதிக்கும் என்று எழுந்த எதிர்பார்ப்பு இன்னொருபுறம். ஆனால், இவை அனைத்துமே மக்கள் மன்றத்தின் தீர்ப்பை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பதுதான், 2010 பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கும் வியப்புக்குரிய விஷயம்.மதவாதமும் சரி, ஜாதியவாதமும் சரி ஓரிரு தேர்தல்களில் வேண்டுமானால் மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதால் வெற்றிக்கு உதவக்கூடும். ஆனால், நல்லாட்சி தரப்படாவிட்டால், சநாதனியானாலும் சரி, சாமானியன் ஆனாலும் சரி மக்கள் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த வெகுஜன விரோத ஆட்சியைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.

                  பிகாரைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்பது யாதவர்களை மட்டுமே உள்ளடக்கியதல்ல. குர்மி, கோரி போன்ற பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களையும் உள்ளடக்கியது. பிற்படுத்தப்பட்டவர் என்பதால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட லாலுபிரசாத் யாதவ், ஏனைய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தனது ஆட்சியை யாதவர்களின் ஆட்சியாகவும், தனது குடும்பத்தின் ஆட்சியாகவும் நிலைநிறுத்த முயன்றதுதான் அவரது வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. குர்மி ஜாதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இனத்தவரான நிதீஷ் குமார், லாலுபிரசாத் யாதவைப்போல ஜாதியச் சட்டையை அணியாமல், பிகாரின் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை முன்வைத்தபோது, மக்களும் அந்தத் தலைவரின் குரலுக்குச் செவிசாய்த்து, அவரது கரங்களை வலுப்படுத்த முன்வந்தனர்.

                       பாரதிய ஜனதா கட்சியின் பிராமணர், சத்திரியர், வைசியர், பூமிகார் போன்ற உயர்ஜாதி வாக்கு வங்கியுடன், நிதீஷ் குமாரின் யாதவரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும், தங்களை ஆதிக்கம் செலுத்தும் ஜாதியான யாதவர்களின் தலைவர் லாலுபிரசாத்துடன் ராம்விலாஸ் பாஸ்வான் கைகோத்தது பிடிக்காத தாழ்த்தப்பட்ட "பாசி' இன வாக்குகளும், வகுப்புக் கலவரங்கள் இல்லாத, வளர்ச்சியை முன்வைக்கும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக ஆட்சியை ஆதரிக்க முன்வந்த சிறுபான்மையினரின் வாக்குகளும் சேர்ந்தபோது, நிதீஷ் குமாரின் தலைமையிலான ஆளும் கூட்டணி நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றியதில் வியப்பொன்றும் இல்லை.உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களைப் போலவே, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ராகுல் காந்தியின் செல்வாக்கு, வாக்குகளைப் பெற்றுத்தரும் செல்வாக்கு அல்ல என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நல்ல தலைமை இல்லாமல் தத்தளிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் போன்ற யாராவது தலைமை ஏற்பார்களேயானால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாற்றாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பை, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருக்கின்றன என்றுகூடக் கருத வாய்ப்பிருக்கிறது.
                   லாலுபிரசாத் யாதவின் குடும்பத்தினர் ஒருவர்கூட இல்லாமல், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிகாரில் ஒரு சட்டப்பேரவை அமைய இருக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸýம்படுதோல்வியடைந்ததற்கு, அந்தக் கட்சிகளின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையும் ஒரு மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. காஷ்மீரிலும் சரி, இப்போது பிகாரிலும் சரி, அச்சுறுத்தல்களைப் பொருள்படுத்தாமல் மக்கள் நல்லாட்சியை எதிர்பார்த்து வாக்களிக்க முன்வந்தனர். காஷ்மீரில் ஏமாற்றப்பட்டனர். தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். பிகாரில் எதிர்பார்ப்புப் பொய்க்கவில்லை. மகத்தான வெற்றியை மீண்டும் அளித்திருக்கிறார்கள்.

                       மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வளர்ச்சியை விரும்புகிறார்கள். நல்லாட்சியை விரும்புகிறார்கள். ஊழலையும் குடும்ப ஆட்சியையும் வெறுக்கிறார்கள். இதுதான் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தியாவுக்குத் தெரிவிக்கும் செய்தி!

No comments:

Post a Comment