Tuesday, August 30, 2011

அந்திநேரத்தென்றல் கனவுகளாய். . !

சேலையூரில் உள்ள, ரஜினிகாந்த் முதியோர் இல்லத்தில் எமது நண்பர்களுடன் சென்று வந்த அனுபவங்கள், எமது பதிவாய் ..



          ஞாயிற்றுக்கிழமை மதியம், அனைவரும் இன்று 3.30 மணிக்கு சேலையூர் சந்திப்பில்(CAMP Road) சந்திக்கிறோம் என்று செய்தியோடு டேனியலிடம்  இருந்து குறுஞ்செய்தி வந்தது. எல்லாரும் கண்டிப்பாக 3.30 மணிக்கு அனைவரும் வந்துவிடுங்கள் என்று கூறியபோதே, 4 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் சரியாய் இருக்கும் என்று எண்ணி சற்றேக் கண்ணயர்ந்ததில் ஒரு அழகான கனவு.
          மழைமகன்(வர்ணன்) இடையிராது தனதன்பினை மண்மகள் மீது பொழிந்து கொண்டிருப்பதாலும், கதிரவனும் மேகம் என்னும் போர்வையினை போர்த்தி இருந்ததாலும், மாலை இதமானதாகவே இருந்தது.
அந்த அந்திநேரத் தென்றலில் திளைத்தவாறு ஒரு முப்பது பேர் கொண்ட குழு, சேலையூரில் இருந்த ரஜினிகாந்த் முதியோர் இல்லத்தை அடைந்து இருந்தனர்.
          அடடா என்ன அழகு, மழை மேகம் கண்ட மயில் போல, தனது தாயைக் கண்ட கன்றுக்குட்டியைப் போல பாட்டிமார்களது முகத்தினில் அத்துனை மகிழ்ச்சி. நாம்  வாழ்நாள் முழுதும் சம்பாதிக்கும் அனைத்துப் பொருட்களை கொணர்ந்து கொட்டினாலும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகாது. இன்னுமொரு தித்திக்கும் விடயம் என்னன்னா பத்து பேருக்கு மேல புதியதாய் Team Everest குழுவில் இணைந்தவர்கள். அனைவரும் பாட்டிமார்களுடன் விசாரிப்புகளில் கரைந்து கொண்டிருந்தோம்.  திடீரென்று ஒரு அபயக்குரல் அனைவரும் குரல் வந்த திசையில் திரும்பினோம்.
அட நம்ம ஒருங்கிணைப்பாளர் தம்பி. இந்த பையன் பார்க்க  சுமாராக இருந்தாலும், ஒரு பெரிய நிகழ்ச்சி நிரலுடன் வந்து இருந்தார்.
கதை சொல்லுதல்: எல்லாரும் "punch" பஞ்சுவோட  "பீர்"பால் கதை தான் என்றிருக்க, அவரின் சீடர் கதை சொல்ல வந்தார், யாரந்த சீடர் என்று யோசிக்க வேண்டியதில்லை, வேற யாரு நம்ம சரண்யா தான். குரு "பீர்"பால் கதைகளில் தேர்ந்தவர் என்றால், சீடர் மரியாதையை ராமன் கதைகளை ஒரு வார்த்தை கூட தவறாமல் சொல்லி விட்டார். சரண்யா சொன்ன கதையிலே மதி மயங்கி, கதை சொல்லுதல் முடித்துக் கொள்ளப்பட்டது. (மனசுக்குள்ள எல்லாருக்கும் மகிழ்ச்சி)
இசையும், பந்தும்: நண்பர் ஒருவர் புரட்சி தலைவரை தனது நடனத்தில் அறிமுகம் செய்யலானார். ஸ்ரீதர் இரண்டு நிமிடங்கள் தூய தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்புறம் ஒரு அக்கா, அடுப்பைப் பற்ற வைக்காமலே சாம்பார் வைத்து விட்டு சென்றார். பிளாரன்சு பாட்டி கோழி இறைச்சி சமைப்பதை விளக்கினார். எங்களில் இருந்த ஒரு பாடகி பாட்டுப் படிக்கலானார்.
வளிக்கூடு(ballon) நிரப்பி வெடிக்க வைத்தல்: அணிக்கு இருவராய் நால்வரும், ஊதிய பலூனை வெடிக்க வைப்பதில் பாட்டிமார்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். பாட்டிமார்களுக்காய் தம்ளரை அடுக்கும் போட்டியும்,யார் வீரர் என்று தீர்மானிக்க முறுக்கு தின்னும் போட்டியும் நடந்தது.  ஒவ்வொரு நிகழ்வும் பாட்டிமார்களின் உள்ளத்திலும், இளையவர்களின் மனங்களிலும் மகிழ்ச்சி மழையைப் பொழிந்தது.
          எங்கள் வாளி வித்துவான், தனது கணீர்க் குரலில் பாடல்களைப் பாடி எல்லோர் மனங்களையும் ஒரு சேர குவிர்த்து இருந்தார். அதுவரை அமைதியாய் இருந்த புலி ஒன்று திடீரென்று பாய்ந்து, நடனத்தில் அசத்தி சென்றார்.  இறுதியாய், பழங்களையும் சிற்றுண்டிகளையும் பகிர்ந்துக்கொண்டு கிளம்பும் போது, பாட்டிமார்களின் இதழ்கள் ஒரு சேர ஒலித்தது, அடுத்த வாரம் வர இயலாதா என்று?
பலரின் மனதில் இனம் புரியாத கவலையுடன் கிளம்பலானோம். கனவும் கலைந்தது
குறிப்பு:
இல்லத்திற்கு வந்து பாட்டியர்களுக்கும், சகதோழர்களுக்கும் மகிழ்வினை அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு முன்பு இருந்தே குறுந்தகவலின் மூலம் நினைவூட்டிக் கொண்டு இருந்த நண்பர் டேனியல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
தங்களது சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையில் இருக்கும் நண்பர்களும், சென்னையைப் பிறப்பிடமாய் கொண்ட அன்பர்களும் இயன்றால் இல்லம் வந்து செல்லுங்கள்.
=======================================================================
மாதம் ஒருமுறையேனும் பிறருக்கு உதவுவோம். 
(12/365)
=======================================================================






No comments:

Post a Comment